பக்கம் எண் :

156கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

மாணவன் :

நாடகங்கள் நிழற்படங்கள் காணும் போதும்
    நண்பருடன் அரட்டையடித் திருக்கும் போதும்
ஊடகத்தே வாராமல் உதவி செய்தாய்!
    உவகையுற்றேன்; தேர்வென்னும் கூற்றுக் கஞ்சிப்
பாடங்கள் படிப்பதற்குத் தேநீர் மாந்திப்
    பாடுபட்டுப் புத்தகத்தை விரித்து வைத்தால்
ஆடகத்தாள் பெயர்த்துநடம் செய்கின் றாயே!
    ஐயையோ என்செய்வேன்! துயிலே! போபோ!

திருடன் :

எங்கள்குலம் காக்கின்ற துயில ணங்கே!
    என்னகைம்மா றுனக்களிக்க வல்லோம் நாங்கள்?
வெங்கொடுமை செய்துபணம் சேர்த்து வைத்தோன்
    வெளிமாடிக் கட்டிலிலே உறங்கு கின்றான்
பொங்கிருட்டில் உழைப்பாலே சோர்ந்து மற்றோர்
    புரளாமல் கண்ணயர்ந்தார்; கன்னக் கோலைத்
தங்குதடை இல்லாமல் சாத்து கின்றோம்
    தாயே! நீ இல்லைஎனில் ஏது வாழ்வு?

துறவி :

எனையாளும் இறைவா! உன் அடியைப் போற்ற
    இளங்காலை நீராடிப் பூசை செய்வேன்
வினையாளர் பரிமாறச் சுவைசேர் உண்டி
    விதவிதமா உண்பேன்பின் பழமும் பாலும்
நினையாத போதெல்லாம் முன்னே நிற்கும்
    நிறைபணமும் வசதிகளும் நிறையப் பெற்றும்
மனையாளும் பெண்ணொருத்தி இல்லை என்ற
    மனக்கவலை கௌவியதால் உறக்கம் இல்லை. 8