பக்கம் எண் :

168கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

எனைமறந்தார்எனைமறைத்தார் இராமனையே வளர்த்தார்கள்
நினைவிழந்தார் இவ்வண்ணம் நின்னாட்டு மக்களெல்லாம்;

அறியாமை இருளகற்ற ஆர்த்தெழுந்த ஈவேராப்
பெரியார் எனைப்பற்றிப் பேசிவந்தார் அவர்படையில்

அப்போது தான்எழுந்தார் அண்ணா துரைநண்பர்
தப்பாக நடந்துவந்த தமிழகத்தார் விழித்துணர்ந்தார்

இப்போது தான்மக்கள் என்னை வளர்க்கின்றார்
தப்பேதும் உண்டோ? தமிழ்க்கவியின் சுவையென்றும்

கம்பன் கவிஎன்றும் காவியத்தின் பெருமைஎன்றும்
இம்பர் நலம்பயக்கும் எழில்ஓ வியம்என்றும்

பேசுகின்றார் பாடுகின்றார் பிறநாடர் போற்றும்வணம்
தேசமெங்கும் என்புகழே செப்புகின்றார் பூரித்து

வளர்கின்றேன் ஈதென் வளர்கதையாம் போய்வருவேன்;
தளர்கின்ற நிலையின்றித் தாய்மொழியைப் பேணிடுக

தீமை படியவிட்டால்தீயில்தான் வீழ்ந்திடுவேன்
ஊமை என நீங்கள் உம்மென் றிருக்காதீர்!

கன்னித் தமிழ்வாழக் காவியச் சுவைவாழ
உன்னிப்போடிருந்திடுக ஊறுசெய்வார் பலருண்டே

என்றுரைத்துப் புகையோ டேகிவிட்ட தவ்வுருவம்
நின்றிருந்த நான்வணங்கி நிமிர்கையிலே கைநழுவிப்

பொத்தென்று வீழ்ந்து புரண்டதுகைப் புத்தகந்தான்
மெத்தென்ற படுக்கைமிசை விதிர்ப்புற்றுக் கண்விழித்தேன்

கம்பன் புகன்றகதை கவிபாட உதவுமென்று
நம்பிக் கவிபுனைந்தேன் நான். 134

(தஞ்சை, கம்பன் திருநாள் கவியரங்கில் திரு. சா. கணேசன் தலைமையில் பாடப் பெற்ற பாடல்.)