மாணவர் மன்றம் நிலைமண்டில ஆசிரியப்பா நாட்டிற் பற்பல நலிவுகள் கண்டோர் ஓட்டிட வேண்டி உயர்பணி செய்தனர்; தாய்மொழி நாட்டம் தவிர்ந்தனர் தமிழரென் றாய்முறை பலகண் டரசியற் போரிடச் சான்றோர் பலராய்ச் சார்ந்தனர்; சிந்தனை தோன்றுதல் இலராய்ச் சொல்வதே கேட்டு மாய்ந்தனர் மக்களென் றாய்ந்தனர் மேலோர், சாய்ந்திடும் தமிழகம் தழைத்திட விரும்பி அல்லும் பகலும் அலைந்து திரிந்து சொல்லினர் சொல்லினர் சொற்பொழி வாற்றினர் பெரும்பயன் கண்டிலோம்; பெய்மழை இருந்தும் அரும்பு தளிருடன் அரும்பும் காயும் கருகிடல் ஏனெனக் கருதினர் ஒருவர் துருவினர்; உண்மை தோன்றிய பயனால் வேரில் தீமை விளைத்திடும் புழுக்கள் பாரித் திருக்கப் பார்த்தனர்; அவற்றை நீக்கிடின் நாட்டில் நிலைபெறு நன்மை ஆக்கிடும், அறிவு வளர்ந்திடும், எனக்கொண் டன்றே தொடங்கினர் ஆர்வந் துணையா நன்றே செய்தனர், நாடும் திருந்தும் மாணவர் திருந்தின் மாநிலம் தெளியும் காணலாம் நலமெனக் கருதிய பெரியார் மனத்தகத் தெழுந்தது மாணவர் மன்றம்; நினைத்தவர் யாரெனின் நிகழ்த்துவன் கேண்மின்! |