பக்கம் எண் :

178கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

குடும்பம் ஒரு காவியம்

எண்சீர் விருத்தம்

அன்பினுக்கோர் எல்லைஎனும் அன்னை, தந்தை,
    அறவுரைகள் எடுத்துரைக்கும் ஏடாம்; இல்லாள்,
இன்பமெனும் சுவையுணர்த்தும் ஏடாம்; உள்ளம்
    ஈர்க்கின்ற மழலைமொழிப் பிள்ளை, நெஞ்சத்
துன்பறுக்கும் இசைச்சுரங்கம்; உடன்பி றந்த
    துணைவர்களோ, தோள்வலிமை காட்டும் ஏடாம்;
வன்புரைக்கும் நாத்தியவள், அவலம் என்னும்
    சுவையினையே வடிகட்டி உணர்த்தும் ஏடாம்.

ஆதலினால் குடும்பமது சுவையால் நெஞ்சை
    அள்ளுமொரு காவியமென் றறைதல் சாலும்;
மோதலிலாக் குடும்பத்தில் பகைக்கு ணத்தை
    மூட்டிவிடும் ஊராரோ, காவி யத்தைத்
தீதுறவே அரித்தொழிக்கும் அந்துப் பூச்சி
    செல்கறையான் இவைபோல்வர்; அவர்கள் பேச்சைக்
காதுமடுத் திடவேண்டா ஒதுக்கி விட்டுக்
    காவியத்தைக் காத்திடுக வாழ்வீர் நன்றே 2