180 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
பிரியா நண்பன் எண்சீர் விருத்தம் எப்பொழுதும் அவன்முகத்திற் சிரிப்பி ருக்கும் எதனாலோ சிலநாள்கள் மலர்ச்சி இல்லை, எய்ப்பின்றிப் பறவைஎனத் திரிவான் எங்கும்; இன்றவனோ வெளிவருதல் காணோம்; இல்லாள் தப்பெதுவும் புரியவிலை யேனும் சீறித் தணலெனவே பேசுகின்றான்; குழந்தை ஒன்றே இப்புவியில் அவன்தெய்வம் அதனி டத்தும் இடியொலியைக் காட்டுகிறான் ஏனோ? ஏனோ? அருள்சிந்தும் விழியிணையில் ஒளியே இல்லை; ஆரிடத்தும் கலகலவென் றுரத்துப் பேசி வருபவன்றான் ஊமைஎனக் காணு கின்றான்; வருபுதிய படங்காண முதலில் நிற்போன் வெறுவெளியில் தனிநிற்கும் தென்னங் கீற்று விளைக்குமெழில் அவன்காட்சி என்று கொண்டான்; பெருமழைபோற் கவிபொழிவான் எழுது கோலும் பேசாமல் இருப்பதுவும் ஏனோ? ஏனோ? இனிமைமிகு தமிழ்மொழியைத் தாழ்த்திப் பேசின் எதிர்த்தழிக்கும் அவன்கவிதை; காதற் பாட்டும் கனிந்திருக்கும்; பகையஞ்சா வீரங் காட்டும்; கலப்பைஎனும் படையுடையார் உழைப்பில் லார்க்குக் குனிந்துதரும் நிலையொழிக்கும்; உணர்ச்சி ஏற்றிக் கொடுஞ்செயலை மடமையினைத் தூள்தூள் ஆக்கும் பனிமழையிற் குயில்போல் வாய டைத்துப் பாடாமல் இருக்கின்றான் ஏனோ? ஏனோ? |