பக்கம் எண் :

182கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

எவர்சொற் கேட்பது?

எண்சீர் விருத்தம்

கடவுளரைப் பாடென்றான் ஒருவன்; மாந்தர்
    கண்ணீரைச் சிந்துகிறார் அதனைப் பாராய்
மடமைக்குப் பாடியவை போதும் போதும்
    மனிதனைநீ பாடிடுக என்றான் மற்றோன்;
கடலிடையே எழும்பரிதி சிவந்து காட்டிக்
    கவிதைக்கு நான்பொருளாய் அமைவேன் என்றான்;
படரிருளை ஓட்டுகின்ற மதியோ காதற்
    பாட்டுக்கு நானின்றேல் யாரே என்றாள்

பசும்புல்லின் நுனிப்பனிநான் உன்வி ழிக்குப்
    படவிலையோ? எனநகைக்க, உருத்து மேகம்
விசும்பிருக்கும் எனைவிடுத்துப் பாடு தற்கு
    வேறுளதோ என்றதட்டச், செய்கை தோறும்
குசும்பிருக்கும் பிள்ளைமொழி பாடி விட்டால்
    குறைந்தாபோம்? எனமனைவி புலந்து சொல்ல,
உசும்புகின்ற உணர்வொடுங்கிப் பாட்டில் நெஞ்சம்
    ஓடாமற் செயலின்றிக் கவிஞன் நின்றான்

கார்வரவும் நான்வருவேன் என்றார் இன்னும்
    காணவில்லை மழையேபோ என்றொ ருத்தி
போர்புரிவாள்; காதலர்என் னருகில் உள்ளார்
    பொழிகமழை பொழிகஎன இன்பம் பொங்க
மார்பகங்கள் பூரிப்பாள் மற்றொ ருத்தி;
    மழைபெய்யின் நல்விளைச்சல் காண்பேன் என்பான்
ஏர்புரிவோன்; மற்றொருவன் இன்று பெய்தால்
    எள்முதிர்ந்து நிற்பதெலாம் பாழே என்பான்