பக்கம் எண் :

184கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

மன்னர் ஆட்சி

எண்சீர் விருத்தம்

மன்னாட்சி என்னுஞ்சொற் கேட்டாற் போதும்
    மனங்குழம்பி வாய்பிதற்றி வெறுத்துச் சொல்வோர்
என்னாட்டில் இருக்கின்றார் அவர்க்குச் சொல்வேன்;
    எங்கெங்கோ கொடுங்கோலர் ஆட்சி செய்தார்
அந்நாட்டார் வெறுத்துரைத்தல் இயல்பே யாகும்;
    ஆருயிராச் செங்கோன்மை புரிந்து வந்த
இந்நாட்டில் தமிழகத்தில் மன்னர் ஆட்சி
    இகழ்ந்துரைப்போர்க் கெஞ்சுவது பழியே யாகும்

குடிபுரக்கும் படியிருக்கும் மன்னர் ஆட்சி
    கொடுங்கோன்மை கண்டறியா நிலையி ருக்கும்;
மடிசுரக்கும் ஆவினைப்போல் மக்கள் வாழ்வில்
    வளஞ்சுரக்க அருள்சுரக்கும் அவர்தம் நெஞ்சம்;
முடியிருக்கும் வாளிருக்கும் வெற்றி கூறும்
    முரசிருக்கும்; குடியாட்சிப் பண்பே அங்குக்
குடியிருக்கும்; இவ்வுண்மை அறிய கில்லார்
    குறைகூறின் அவர்மதியில் பழுதி ருக்கும்

மொழிவளர்த்தார் கலைவளர்த்தார் அறம்வ ளர்த்தார்
    முறைபிறழும் நிலைவருமேல் அறிஞர் நல்ல
மொழியுரைக்கச் செவிகொடுத்தார்; கற்பின் செல்வி
    மூண்டெழுந்த சீற்றத்தால் கடிந்து ரைத்துப்
பழியுரைத்தாள் உயிர்கொடுத்தான் பாண்டி மன்னன்;
    பார்த்ததுண்டோ குடியரசில் இதுபோல் மேன்மை?
இழிவுரைக்க முயலாதீர்! உயர்ந்த தென்றே
    இயம்பிடுக சங்கத்து மன்னர் ஆட்சி 3