பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை201

3. தமிழே வா!

தமிழே வா செந் தமிழே வா
தவித்திடும் என்முன் தனிநடை காட்டித்

தமிழே

அமிழ்தோ பாகோ அடைதரு தேனோ
அரும்பிய வாய்மொழி கரும்பின் சாறோ

தமிழே

காலின் சிலம்பொலி காதினில் இனிக்கக்
கைவளை ஒலியும் கலந்தினி திசைக்க
நாலடி பாலொடு நடந்து நீ வருவாய்
நாலா யிரம்பா நான்தரப் பெறுவாய்

தமிழே

அணியும் பொருளும் அளவில் கொண்டாய்
ஆயினும் நான்சில அளித்ததும் கண்டாய்
வணிகன் வழங்கிய மேகலை ஆடிட
வருவாய் வருவாய் வந்தெனைக் கூடிடத்

தமிழே

நீதருங் கலியால் நெகிழ்ந்ததென் நெஞ்சம்
நினையே நினைந்து நினைந்துளம் கெஞ்சும்
பாதருங் காவியப் பாவையே நீயே
பரிவுடன் கடைக்கண் பார்த்தருள் வாயே

தமிழே