5. பைந்தமிழ்க் காதலி வாடல் தவிர்த்து வாழ்வு நல்கும் பாடல் என்னும் பைந்தமிழ்க் காதலி! நின்பாற் கலந்துளம் நெகிழுங் காலை என்மனம் பிறிதொன் றெண்ணுவ தில்லை; முற்படு பொருள்கள் கட்புல னாகா; செப்பிடும எவர்சொலும் செவிப்புலம் நுழையா; தண்புன லாடுவேன், தையால் வருகுவை; கண்படை கொள்வேன் கனவிடைத் தழுவுவை; உண்ணும் பொழுதும் உவந்துடன் அமர்குவை; இனித்தஎன் துணையொடு தனித்துரை யாடினும் கனிச்சுவை இதழ்தரக் கனிந்துவந் தணைகுவை! அனிச்ச மலரடி அணங்கே நின்னால் உறங்கலும், உண்ணலும் மறந்துளன் பலகால் இரங்கும் உளத்தினை இனியை எனினும் பாட்டுல காளும் பைந்தமி ழரசி ஆட்டிப் படைப்பைநீ ஆடுவன் யானே. 11.2.1985 |