206 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
6. கருத்திற் கலந்த கழகம் தாயே போற்றி, தமிழே போற்றி; நீயே உயிரென நினைவேன் போற்றி! ஈன்ற உன்னை இனிதிற் காக்க மூன்று கழகம் முந்தையர் கண்டனர்; வழிவழி வந்தோர் வாழ்வுனக் களிக்க எழிலுறு கழகம் இற்றையர் கண்டனர்; வளமுற நின்னலம் வளர்த்து வருதலாற் கழக வுணர்வுகள் கருத்திற் கலந்தன; வருத்துமென் வாழ்வு வளமுறற் பொருட்டோ கருத்திற் கலந்தன கழக வுணர்வுகள்? வயிற்றைக் கழுவும் வழியெனக் கருதிலேன் எயிற்றைக் காட்டும் இழிகுணம் எனக்கில்லை; பழியுனக் குறுமேல் பாய்ந்ததைத் தடுக்கக் கழகம் ஒன்றே களமெனக் கண்டேன்! உன்னால் அன்றோ கழக வுணர்வுகள் என்னுட் புகுந்தன இறுகப் பற்றின; கழகப் பாவலன் யானுனைக் காப்பேன் உளமுறும் உணர்வே வாழிய தமிழே! 27.04.1980 |