பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்21

உறுப்பெழில் நோக்கினான்

நின்ற நிலையை நிமிர்ந்தொரு முறைமனம்
ஒன்றும் படியவன் உற்று நோக்கினன்;
பின்பவள் மலர்த்தாட் பெருவிரல் நோக்கி
இன்ப வல்லியின் இடையினை நோக்கி
இடையில் ஒன்றும் இடக்கை நோக்கி
வடிவொடு தொங்கும் வலக்கை நோக்கி
எடுத்த மார்பும் தொடுத்த தோளும்
கழுத்தின் வடிவும் கண்டபின் முகத்தின்
வட்டம் நோக்கி வாயிதழ் நோக்கி
ஒட்டும் புருவம் ஒண்குழைச் செவியை
எட்டும் விழியின் இணைஎழில் நோக்கிக்
கதுப்பும் நுதலும் கண்கவர் மூக்கும்
விதுப்புற நோக்கி வெய்துயிர்த் தனனே.

சிற்றுளி வல்லதோ

அவ்வயின் நின்ற ஆருயிர்த் தோழி
“இவ்விதம் பெருமூச் செறிவதன் நோக்கம்
யாது” என வினவ ஆடவன் கூறுவான்
“மாதுடல் அமைப்பின் மாண்புகள் யாவும்
சிற்பச் செந்நூல் செப்பும் இலக்கணச்
சொற்படி கண்டேன் சொக்கினேன், இவளுரு
அற்புதப் படைப்பாய் அமையும் எனினும்
விழியில் வழியும் ஒளியும் அருளும்
பிழிதேன் பொழியும் மொழிபுகல் வாயின்
இதழில் தவழும் இனிய மூரலும்
புதுமைச் சிலையில் புகுத்திக் காட்ட
என்கைச் சிற்றுளி வல்லதோ எனநான்
உன்னிப் பார்த்தேன் உயிர்த்ததென் நெஞ்”சென;

இருவர் நெஞ்சம்

சிலையாய் நின்றவள் சிரித்தனள்; வாயில்
நிலையாய் நிற்கும் நிரல்படு முத்தின்