பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை215

வண்டினங்கள் இசையமுது பொழிந்து சூழும்
    வளர்முல்லைக் காடிருக்கும்; குறிஞ்சித் திட்டில்
*தண்டகம்போல் தேனருவி முழங்கி நிற்கும்;
    தரைமுழுதும் அழகெல்லாஞ் சிரித்தி ருக்கும்;
கண்டுநிகர் தமிழியக்கப் பாவ லர்க்குக்
    கைநிறையப் பாண்டியன்நற் பரிச ளிப்பான்;
பெண்டிரினம் குடும்பவிளக் கேற்றி வைத்துப்
    பேணிநலம் துய்த்திருப்பர் அந்த நாட்டில்

பாட்டென்ற வில்லெடுப்பான் பகைமு டிக்கப்
    பகுத்தறிவு நாணேற்றிச் சொல்தொ டுப்பான்
‘காட்டுன்றன் வீரத்தைப் புலியின் போத்தே
    காப்பாற்றுன் தாயகத்தை’ எனப்ப ணிப்பான்
பாட்டாட்சிப் பாசறையில் பயிற்று வித்துப்
    படைமறவர் பற்பலரைத் தோற்று வித்தான்;
ஏட்டாட்சிப் போர்க்களத்தில் என்றன் மன்னன்
    எனக்களித்தான் படைத்தலைமை அவன்பேர் வாழி!

21.3.1978

(‘தமிழரசு’ - பாவேந்தர் மலருக்காக எழுதப்பட்டது)


*தண்டகம் - குறிஞ்சி நிலப்பறை