பக்கம் எண் :

222கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

16. அன்றும் இன்றும்

சிற்றிளம் பருவம் பெற்றஅக் காலை
உற்றநற் களிப்போ ஓரள வில்லை;
இரவும் பகலும் எய்துமம் மகிழ்ச்சி
அறவே எனைவிட் டந்தோ அகன்றது!
விளையாட் டயரும் இளையாச் சிறுவர்
களியாட் டாடிக் கள்ளமில் மனத்தாற்
பழகினர் நெஞ்சம் இளகினர் அடடா!
கழிந்தஅந் நாளைக் கருதுங் காலை
உயிர்ப்பதுங் கண்ணீர் உகுப்பதும் வியப்பில்லை;
இரும்பின் உருளை விரும்பி உருட்டி
வரும்போழ் தின்பம் வளரும் வளரும்!
ஓஓ பம்பரம் ஒன்றே போதும்
தாவா இன்பந் தந்தெனை வளர்க்கும்;
இன்றவை எங்கே? சென்றதும் எங்கோ?
இன்றென் தலையே இயங்கிடும் பம்பரம்
ஒன்றிய கயிறோ ஓயாக் கவலைகள்;
இறக்கை யிழந்தேன் இன்ப வானிற்
பறக்க இயலேன் பறக்கினும் வீழ்வேன்;
அன்றெலாம் இன்பம் அழைக்குமுன் வருமே!
நின்று கூவினும் இன்றது காண்கிலேன்;
உதைத்துதைத் தாடும் உருள்பந் தொன்றும்
புதைபொருள் போல மறைந்துள தின்றே!
ஈங்கிவன் நானே எழுபந் தானேன்
ஓங்கி உலகெனை உதைத்துதைத் தாடும்;
கவட்டை வில்லுங் கவணும் மறந்தேன்!