19. வாழ்க தமிழரசு கற்றறி புலவர் நாவில் களிநடம் புரியும் பாட்டால் நற்றமிழ் மணக்கும் பூங்கா; நயமிகு போட்டி யிட்டு வெற்றியில் மிளிரும் நல்ல *வெண்டளை மலருங் காடு; தற்கிணை தானே யான தமிழர சென்னும் ஏடு! வயல்களிற் புரட்சி செய்து வளமைகள் சேர்க்க வேண்டிச் செயல்முறை யனைத்துங் காட்டிச் சீர்செயும் உழவர் தோழன்; பயனுறு தொழில்கள் ஓங்கப் பயிற்றிடும் பள்ளி யாசான்; அயலவர் கண்டு சொன்ன அறிவியற் கலைசேர் கோவில்! பழந்தமிழ்ப் பண்பா டெல்லாம் பாரினில் மீண்டுந் தோன்ற உழந்துழந் தோடித் தேடி ஒவ்வொன்றுங் கண்டு வந்து வழங்கிடும் வள்ளல்; வல்லார் வரைந்திடும் ஓவி யங்கள் தழைந்திடும் ஓவக் கூடம் தமிழர சென்னும் ஏடு!
*வெண்டளை - வெண்பா |