பக்கம் எண் :

228கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

நெஞ்சினில் தமிழை வைத்தார்
    நெடுந்தொலை நாடு சென்று
விஞ்சையின் மேன்மை கண்டு
    விளக்கிடும் பயண நூலாம்;
எஞ்சலில் திறமை கொண்டார்
    எழுதிடுங் கதையின் பேழை;
செஞ்சொலைச் சிதைக்கா வண்ணம்
    செந்தமிழ் எழுதும் ஏடு!

கலைகளில் தோய்ந்த உள்ளம்
    காத்தலால் இந்த ஏடு
பலவகைச் சிறப்பும் மேவிப்
    பயன்தரக் காணு கின்றோம்;
உலகினில் அரசின் சார்பில்
    உலவிடும் இதழ்கட் கெல்லாம்
தலையென உலகம் போற்றத்
    தமிழர சென்றும் வாழ்க!

(‘தமிழரசு’ ஐந்தாம் ஆண்டு மலருக்கு)

03.06.1974