238 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
26. கடலின் பெயர்கள் கண்ணுக்கும் எட்டாது கடந்து நிற்கும் காரணத்தால் உனைக்கடலென் றழைத்தார் முன்னோர்; எண்ணுக்குள் அடங்காத புனற்ப ரப்பை ஏற்றுளதால் பரவையென இயம்பி நின்றார்; உண்ணற்கோ உவர்ப்புடையாய் அதனா லுன்னை உவரியெனப் பெயருரைத்தார்; மலையி னின்று மண்ணுக்குள் ஓடிவரும் எல்லா ஆறும் மருவியுனைப் புணர்வதனால் புணரி என்றார். அளக்கரிது நின்பெருமை எனவு ணர்ந்தே அளக்கரெனப் பெயரிட்டார்; அலை யெழுப்பி முழக்குகிற வேலையினை ஓய்வே யின்றி முப்பொழுதும் செய்வதனால் வேலை என்றார்; விளக்கமுறச் சொலமுடியா ஆழங் கொண்டு விளங்குவதால் ஆழியென்றார்; ஆக்க லோடும் அழித்தலெனக் காத்தலென மூன்று நீர்மை அமைந்தமையால் முந்நீரென் றானாய் இங்கே. ஆரமுடன் பவழமெலாம் வாரி வாரி அளிப்பதனால் பயன்பெறுவோர் வாரி என்றார்; வாரெனுஞ்சொல் நீட்சிஎனும் பொருளைக் கொண்ட வாய்மையினால் நீண்டவுனை வாரி என்று பேரெழுதி வைத்தனரோ? யாரே கண்டார்! பேருலகில் அமைதியினைக் காணா தென்றும் நேரமெலாம் சலசலவென் றொலிப்ப தாலே நினைச்சலதி எனவுரைத்து மகிழ்ந்தார் போலும்! 27.11.1980 |