‘வந்தெங்கள் கலிதீர்த்த மகளே, வேண்டும் வளமெல்லாம் வாரிப்போ’ என்று சொன்னாள்; சொந்தங்கள் குறைசொல்லக் கூடா தென்றே சொலற்கரிய சீர்வரிசை தந்தாள் அன்னை! முல்லைஎனும் சிற்றன்னை, தன்பால் வந்த முதல்மகளைத் தலைநீவி உச்சி மோந்து மல்லிகையால் தலைக்கோலம் செய்து விட்டு மான்கன்றும் விளையாடத் தந்தாள்; மேட்டுக் கொல்லைதரும் அவரையொடு வரகு சாமை கொழுந்துவரை முதலான பொருள்கள் தந்தாள்; பல்வகைய மலர்சூட்டிப் பாலும் நெய்யும் பரிந்தளித்து வாழ்த்துரைத்து நின்றாள் அங்கு. மருதமெனும் மாமனவன் தன்பால் வந்த மலையரசி மகளைத்தா மரைமு கத்தால் பெருமகிழ்வு காட்டிவர வேற்று நின்றான்; பேராம்பல் மலர்சூட்டி வாழ்த்தி நின்றான்; மருமகளின் மனமகிழ நெல்ல ளந்தான்; வாழையொடு கமுகுதரும் குலைகொ டுத்தான்; திருவுடையன் வளம்பலவும் உவந்த ளித்துச் செங்கரும்பும் வந்தவட்குத் தந்து நின்றான். பெற்றவரும் மற்றவரும் மகிழ்ந்து தந்த பெருமைமிகு சீர்வரிசை அனைத்துங் கொண்டு நற்றுணைவன் கடற்பேரான் அவனை நோக்கி நயந்தோடி நலம்பாடி விரைந்து சென்றாள்; மற்றவனும் பெருமகிழ்வால் அவளைத் தாவி மார்பிறுக மனமுருக அணைத்துக் கொண்டான்; பெற்றுவரும் வரிசைஎலாம் கொள்க என்றாள்; பெருமகனோ அலைக்கையால் கொள்ளேன் என்றான். |