244 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
29. உயிர்ப்பொம்மை பத்துத் திங்கள் பரிவுடன் வயிற்றில் வைத்துக் காத்து வளர்த்தஓர் பூஞ்செடி; மனத்தில் ஊறிய மாசறு நினைவுகள் அனைத்தும் சேர்தரத் தளிர்த்த பசுந்தளிர்; இருவர் அன்பும் இணைந்து பிணைந்து மருவிய நாளில் மலர்ந்ததோர் அரும்பாம்; இருவிழி குளிர ஈன்றோர் மகிழக் குறுகுறு நடைபயில் கோலச் சிறுதேர்; பொருளொடு புணராப் புதுவகை மொழியைச் சிறுமலர் வாயால் சிந்திடும் பைங்கிளி; சுருள்படு சிறுமுடி, மருள்நிறை கருவிழி, எழில்தவழ் செவ்விதழ், இணையிலாக் குறுநடை, தளிர்நிகர் சிறுவிரல், தங்கத் திருநிறம், குளிர்மொழி அனைத்தும் கொளும்உயிர்ப் பொம்மை; அம்மக வுயிரை அருந்திய நோயினை அம்மையென் றறைகுவர்; அடுக்குமோ அப்பெயர்? எங்கே அவ்வெழில்? எங்கே அவ்வுயிர்? எங்கே எங்கே என்றுநான் கதறினேன்; பெற்ற வயிற்றில் பற்றிய தீயை மற்றவர் எவ்வணம் மாற்றுவர்? எனினும் என்விழி நீரை எடுத்தெடுத் தூற்றினேன் நின்னழல் தணிந்து நிமிர்ந்தெழு தாயே! (குழந்தையைப் பிரிந்த தாய்க்குக் கூறிய ஆறுதல்.) 25.09.1975 |