30. நெஞ்சிற் புகுந்த வேல் அறிவும் பண்பும் அமைதியோ டெழிலும் செறிதரு திருமுகம் மருவிய குழலி! முகமல ரிதழில் தவழ்தரு மூரலில் தொகைநூ லினிமை தோன்றுதல் கண்டேன்; உள்ளக் கருத்தைத் தெள்ளிதின் உரைக்கும் கள்ளம் அறியாக் கயல்விழி கண்டேன்; ஆறாம் வகுப்பே தேர்நீ, ஒருபிழை நேரா தெழுதும் நேர்த்தி கண்டேன்; பிள்ளைமை நிலையிலும் பெரியவள் போல்நீ என்னை ஓம்பிய இயல்புங் கண்டேன்; பெதும்பை நின்னை வியந்து புகழ்ந்தேன். ததும்பும் இனிமைத் தமிழை நின்வாய் மழலை வடிவில் தருமென மகிழ்ந்தேன்; அழகோ வியமே! இம்மகிழ் வெங்கே? பூசாச் செம்மை பொருந்திய நின்னிதழ் பேசா தெனலும் பேதுற் றயர்ந்தேன்; ஆண்டவன் படைப்பென அன்னை நவின்றனள் ஈண்டவன் யாண்டுளன்? எனயான் வெகுண்டு கொடியன் அவனைக் கொல்லுவன் பாய்ந்தெனத் தொடுவேல் எடுத்துத் துணிந்து நடந்தேன்; எங்கோ மறைந்தனன்! எடுத்தஅவ் வேலைப் பொங்குமென் னெஞ்சிற் புகுத்திக் கொண்டேன்; நின்நா மொழிபுகல் நாள்வரின் நெஞ்சிற் பாய்வே லதனைப் பறித்தெறி வேனே! (புதுச்சேரி கவிதைச் செல்வர் கல்லாடன் மகள் திருக்குழலி பேசாமையறிந்து மனம் நொந்து பாடியது) 4.05.1987 |