248 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
33. வாழ்க்கைப் போராட்டம் (கலிவெண்பா) ஆழம் மிகவுடைய ஆறென்று வாழ்க்கைதனைச் சூழும் அறிவதனால் சொன்னால் மிகப்பொருந்தும்; வேகப் புனல்தள்ளி வெள்ளத் தெதிர்நீந்திப் போகப் பயின்றவரே போற்றுங் கரைகாண்பர்; வட்டப் பெருஞ்சுழிகள் வாய்திறந்து நிற்பதுண்டு- எட்டிப் பிடித்திழுத்தே ஏப்ப மிடமுயலும்; மூழ்கிச் சிலகாலை மூச்சடக்கிச் செல்கின்ற சூழ்நிலையும் நேர்வதுண்டு சோர்ந்துவிடக் கூடாது; துன்பம் ஒருகரையாய் இன்பம் மறுகரையாய், முன்பே அமைந்த முறைமை யுடையதுதான்; அந்தக் கரையிலையேல் அவ்வாற்றின் போக்கதனால் எந்தத் துயர்விளையும் என்றுரைக்க ஏலாது; கூட்டாய் முகில்பொழியக் கூடிப் புனல்பெருகும் காட்டாறாய் ஒவ்வொருகால் காண்பதுண் டவ்வாழ்க்கை; சேறாய்க் கலங்கிச் சிதறிக் கழிநீராய், ஊராமல் ஊர்ந்துவரும், ஓடிக் குழிவீழும், நாற்றம் மிகுந்திருக்கும் நாட்டில் சிலர்வாழ்க்கை, மாற்றி யமைக்க வழியறியா தேங்குகிறார்; நல்லமலர்ச் சோலைக்கும் நல்வாழ்க்கை ஒப்பென்று சொல்வதற் குள்ளம் துடிப்பதனால் சொல்கின்றேன்; செய்கையுடன் பண்பு சிறந்திருக்கும் நன்மனையாள் மெய்வருடி இன்புறுத்தும் மென்தென்றற் காற்றாவாள்; நண்ணி மயக்குறுத்தும் நன்மழலைச் செல்வங்கள் கண்ணைக் குளிர்விக்கும் வண்ணமலர்க் கூட்டங்கள்; |