பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை249

பண்ணெழுப்பிப் பூத்தழுவிப் பாடுஞ் சுரும்பொலிகள்
பெண்ணெழுப்பும் பாட்டில் பிணைந்த குரலிசையாம்;
கொம்புத்தேன் தந்த கொழுஞ்சுவையை வாயிதழின்
வம்புத்தேன் தந்து மகிழ்விக்கும்; ஆதலினால்
நல்வாழ்க்கை ஒப்பாகும் நல்லமலர் சோலைக்கு;
சொல்வார்க்குத் தோன்றாது செல்வார்க்குத் தோன்றுமிது;
தான்பிறந்த நாள்தொட்டுத் தண்மதியில் போயிறங்க
வான்பறக்கும் நாள்வரையில் வாழ்க்கைஒரு போர்க்களந்தான்;
அன்னை கருக்கொள்ளும் அப்பொழுதே கூடுமணு
முன்னம் பொருதன்றே முற்றி உருவாகும்;
பின்னர்ப் பிறந்து பிணிகளொடு போராட்டம்
இன்னும் அளவிலா எத்தனையோ போராட்டம்
மாந்தன் வரலாறே மாபெரும் போராட்டம்
காந்தும் வறுமையொடு கண்மூடிக் கொள்கைஎனச்
சீறி வரும்பகையோ செப்பத் தொலையாது
நூறு பகைவரினும் நூறித் தொலைப்பதற்
கூக்கந், துணிவுடைமை, ஓர் ந்துணருங் கூரறிவு,
காக்கும் படையாகக் கைக்கொண்டு போராடி
வெற்றிக் களிப்போடு வீறுநடை போட்டுநலம்
பெற்றுத் திளைப்பதுதான் பேருலக வாழ்க்கைநெறி;
போராட்டங் கண்டஞ்சிப் போகாமல் வாழ்க்கைஎனும்
தேரோட்டி இன்பந் திளைப்பவனே வீரன்;
ஒருபகை கண்டஞ்சி ஓலமிட் டோடி
மருள்பவன் நாளும் மடிகின்ற கோழை;
நிலவுக்கும் வாழ்க்கை நிகராகும், ஓரும்
புலனுக்கு நன்கு புலனாகும் இவ்வுண்மை;
கூடிக் களிப்போர்க்குக் கோடி மகிழ்வுதரும்,
ஊடிப் பிரிந்தோர்க்கோ ஓயாக் கவலை தரும்;
கூறுமிவை வானிலவின் கொள்கையல, சூழ்நிலைகள்
சேரும் மனநிலையாற் செய்பயனும் வேறாகும்;
சூழ்நிலைக் காளாகிச் சுற்றும் மனநிலையால்
வாழ்வினையும் வெவ்வேறு வாட்டத்திற், காண்கின்றான்;