பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை251

34. காலம் வரும் - நேரம் வரும்!

(கலிவெண்பா)

மேலைத் திசையெல்லாம் மேற்பரப்பில் செவ்வொளியை
மாலைக் கதிரோன் மனம்மயங்கப் பாய்ச்சியதால்
வானத்துக் கார்முகில்கள் வண்ணம் பலகாட்ட
நானந்தக் காட்சி நலங்கண்டு மெய்ம்மறந்தேன்;
என்னகத்தே ஆட்சிசெயும் இன்றமிழின் முன்பிறந்த
தென்னகத்தின் சொத்தான தென்றலெனும் மென்காற்று
வாவி புகுந்த வளர்தா மரைவருடி,
நீவி வரும்போழ்து நீள்மாட மாளிகையில்
தாவிப் படர்ந்துகொடி தள்ளாடும் முல்லைவிரி
பூவிற் படிந்து, புதுமணத்தை மொண்டுகொண்டு,
கொட்டுங் கழைக்கூத்தி கோல்நட்டு வேழம்பர்
கட்டும் நெடுங்கயிற்றில் கால்வைக்கும் பாங்கெனவே
மெல்ல நடம்பயின்றென் மேனியினைத் தீண்டுதலால்
சொல்லரிய ஓரின்பச் சூழ்நிலையில் நானிருந்தேன்;
கொஞ்சுங் கனியிதழில் கொவ்வைச் சிவப்பேந்தி,
மஞ்சின் கருமையெலாம் வார்கூந்தல் மேலேந்தி,
நீண்ட கயல்விழியில் நெஞ்சக் குறிப்பேந்திப்,
பூண்ட சிலம்பொலியைப் பூவடியில் தானேந்தி,
மாநிலத்துப் பூத்த மலரெல்லாந் தந்தஎழில்
மேனியகத் தேந்தியவள் மெல்லியநற் கைம்மலரில்;
ஆவின்பா லேந்தி அழகுச் சிலைபோலப்
பூவின் முகஞ்சுருங்கப் போந்தருகில் நின்றிருந்தாள்!
தென்றலுக்குப் பின்வந்தாள் தெள்ளமிழ்தம் கைக்கொடுத்து
நின்றிருக்கக் கண்டு நிமிர்ந்து முகம்பார்த்தேன்;