பக்கம் எண் :

256கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

பூப்பொறித்த மேலாடை திருத்தி விட்டாள்;
    புறமுதுகில் தொங்குகிற சடையை மார்பின்
மேற்புறத்துப் படரவிட்டாள்; பார்த்த பின்னர்
    மேலுமதைப் பின்புறத்தே புரள விட்டாள்;
யாப்புறுத்த என்மனத்தைத் துடிக்க வைத்தாள்;
    எழிலெல்லாந் தன்னிடத்தே படைத்து வைத்துக்
காப்பளிப்பாள் செய்கின்ற செய்கை எல்லாம்
    காதலுக்கோர் அறிவிப்பாம் என்று கண்டேன்.

செம்புலத்துப் பெயல்நீர்போல் இருவர் நெஞ்சும்
    சேர்ந்தமையால் இல்லறத்துப் பள்ளி புக்கோம்;
ஐம்புலத்தை ஒருபுலமே யாக்கி யங்கே
    அளப்பரிய கலைபலவுங் கற்று வந்தோம்;
அம்புவிக்கு விளக்காக விளங்குந் திங்கள்,
    அளவில்பல விண்மீன்கள், அகன்றவானம்;
எம்முளத்தில் புதியகதை பலவுஞ் சொல்ல
    இணைகூற முடியாத உலகஞ் சென்றோம்.