பக்கம் எண் :

258கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

உலகியலின் பலகதைகள் பேசிப் பின்னர்
    உணவுண்ணச் சுவையமுது படைத்த ழைத்தாள்;
சிலமொழிகள் உரையாடி உண்ணும் போது
    சிறுவிக்கல் ஒலிகேட்டு நீரைத் தந்தாள்;
விலகியது வருவிக்கல், உண்ட பின்னர்
    வெளியிடத்தில் சாய்ந்திருந்தேன் அவளும் வந்தாள்
சிலபொழுதில் பேரேப்பம் ஒன்று விட்டேன்
    ‘செரித்ததென அறிவிக்கும் அறிவிப்’பென்றாள்.

கனிமொழியாள் கொட்டாவி விடுதல் கண்டேன்,
    கண்ணிமைகள் இணைவதற்கோ அறிவிப் பென்றேன்;
இனியவளும் அயர்விழியால் ஆமாம் என்றே
    எழுவதன்முன் இருதும்மல் தும்மி விட்டேன்;
‘பனிபொழியும் நிலவொளியில் நீண்ட நேரம்
    படுத்திருந்தால் தும்மல்வரா தென்ன செய்யும்?
இனியெழுக உள்வருக’ என்ற ழைத்தாள்;
    என்மனையாள் குறிப்பறிந்தேன் எழுந்து சென்றேன்.