பக்கம் எண் :

262கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

41. பருவப் பேச்சு

அவன்: அம்புலிப் பருவம் வந்ததும் வருவேன்
    அதுவரை காத்திரு என்றாளே
தண்பனிப் பருவம் தணலாய்க் கொதித்தது
    தனிமையில் வாடிடச் செய்தாளே!

அவள்: வருகையின் பருவம் தருவது புரிந்தேன்
    வாடிடும் அந்நிலை ஏன்இனியே?
அரிவைஎன் னுள்ளம் நின்வயமாக
    அருகினில் இருப்பேன் நான்இனிமேல்!

அவன்: ஊசலின் பருவம் ஆகிய தென்மனம்
    ஒருநிலை யின்றி அலைகிறதே
ஆசையின் பெருக்கில் முத்திடும் பருவம்
    அளித்திட உன்னை அழைக்கிறது!

அவள்: 1 காப்பின் பருவம் படிப்பதன் முன்னே
    கன்னியின் பருவம் நாடுகிறாய்
2யாப்பின் பருவம் கடப்பது முறையோ
    அதற்குள் ஏனோ வாடுகிறாய்?

அவன்: பிள்ளைத் தமிழைப் பேசிடும் அமுதைப்
    பெற்று மகிழ்ந்திட நான்விழைந்தேன்
அள்ளித் தந்திட நின்னை யழைத்தேன்
    ஆகும் பருவம் எத்தனையோ?

அவள்: பத்துப் பருவமும் பாடிய பின்னே
    பாலப் பருவம் நான்தருவேன்
பெற்றுக் கொண்டபின் தாலப் பருவம்
    பிள்ளை மகிழ்ந்திடப் பாடுகநீ!