| 268 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
45. இரண்டு குழந்தை ஐம்பதாண் டகவை யடைந்தனை யாகினும் அம்புலி முகத்தின் அழகிலும் கொவ்வைப் பழந்தூங் கிதழிற் படர்தரு நகையிலும் குழந்தையின் பொலிவு குலவுதல் கண்டேன்; தீதறி யுலகம் தெரியா திருந்தனை சூதும் வாதும் யாதும் அறிந்திலை யாதுநீ செய்யினும் பேதுறும் மகவே; கடிந்துனை ஒருகாற் கழறினும் விழிநீர் படிந்து சிற்றிளம் பாவை யாகுவை; என்னுயிர்க் காதலி எவ்வகை நோக்கினும் பொன்னுருக் குழந்தை போலுனைக் காண்குவென் எனயான் மொழிந்தேன்; என்னுயிர்த் தெய்வம் புன்னகை பூத்துப் “போதும் புகழ்ச்சி என்னுளத் துறையும் இறைவ நீயும் குழந்தை யுள்ளம் கொண்டனை யறிவேன்” எனலும் நகைத்தேன் “இரண்டு போதும் இனிமேல் வேண்டா” என்றனள் கரும்பு மொழியில் குறும்பு கலந்தே! 09-04-1983 |