பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்27

தடந்தோள் வீரன் தலைநிமிர்ந் திருந்து
வெற்றிச் செருக்கொடு விழித்து நோக்கினன்
பெற்ற களிப்பால் பெருமூச் செறிந்தனன்;
சிற்றுளி கைவிரல் பற்றி யிருந்தது;
காதற் கனவு பலித்திடக் கண்டேன்
ஏதுக் கினித்துயர்? இவ்வுல காள்வேன்
நானும் அவளும் வானம் பாடி
போலப் பறந்து வானில் திரிவோம்
எனப்பல கற்பனை எண்ணி நின்றனன்;

சூழ்ச்சி வென்றது

சினப்படு வேந்தன் செய்ததோர் சூழ்ச்சியால்
ஆங்கோர் கிழவி அழுது வந்தனள்;
`தீங்குனக் கென்ன? செப்’பெனச் செப்பினள்;
`வடிவேல் மன்னன் மகளென வந்த
கொடியிடை மயிலி மடிந்தனள்’ என்றாள்;
அலறினன் கதறினன் `ஐயகோ’ என்றனன்
`பலபகல் இரவுகள் பாடுபட் டுழைத்ததால்
உறுபயன் இதுவோ! உலகம் முடிந்ததோ!
இருளெனைச் சூழ்ந்ததோ! இனிஉயிர் விழைவதோ!’
கலைஞன் புலம்பல் காடெலாம் பரவி
மலையகம் மோதி எதிரொலித் தெழுந்தது;
மாதின் சிலைபால் ஓடினன் மயங்கி
மோதினன் முட்டினன் `மோனத் திருக்கும்
காதற் சிலையே கண்ணீர்த் துளியால்
குளித்திடு! என்னுயிர் குடித்திடு விரைவில்
யாண்டுச் சென்றனை? யாதுநீ எண்ணினை?
ஆண்டு வருவேன் ஆரூயிர்க் காதலி!’
என்றவன் புலம்பிக் குன்றினில் ஏறி
நின்றனன் வானை நிமிர்ந்து நோக்கினன்;