பக்கம் எண் :

32கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

புதுவகைச் சுவையெலாம் பொருந்தப் பாடிக்
காணா இன்பக் காதல் ஊட்டினள்;
ஆணோ யாழில் அவலம் மீட்டினன்;
மாருத வேகன் மாறின னாகக்
காரிகை கலங்கினள்; “காதலி! இசையில்
அவலம் காதல் அனைத்தும் சுவையே
கவலை நினக்கேன்? கைவிரல் ஒட்டி
மீண்டும் யாழினை மீட்டுதி கண்ணே!
காண்டும் இன்பங் களிஉல கதனில்”
என்றனன்; தோகை எடுத்தனள் யாழை;
ஒன்றிய குரலால் உள்ளம் உருக
அவலச் சுவையே அவளும் பாடினள்;
திவவுக் கோல்யாழ் தெரிநரம் பிடையே
சுவைசெய் சிறுவிரல் துடிப்புடன் தடவி
முடிநிலை யுறுங்கால் முறிந்ததோர் நரம்பே;
இடியொலி கேட்டெனத் துடியிடை நடுங்கி
இதய நரம்புதான் இற்ற தோவெனப்
பதறினள்; “அஞ்சேல் பாவாய்” என்றனன்;
இருப்பினும் அவள்மனம் ஒருப்பட வில்லை;

காதலும் கடவுளும்

சிரிப்பினை யிழந்தனள் சிந்தையிற் கலக்கம்
நிறைந்தனள்; அவளுறு துயரம் நீக்குவான்
“அலையெழு புனலிடை மலைநிகர் மரக்கலம்
பலவரூஉம் அழகினைப் பார்” எனப் பகர்ந்தனன்;
“அலமரும் மரக்கலம் ஆகினேன் யான்” எனச்
சிலைநிகர் அம்மகள் செப்பின ளாகப்,
“பலவகைச் செடிதொறும் பறந்து படிந்து
மலரிடைத் தேன்நுகர் வண்டுகள் காண்” என,
“அலர்தரு நறவம் அருந்திப் பிறிதொரு
மலர்முகம் நோக்கும் வண்டினம் புரிசெயல்
நின்னிற் றோன்றா தொழிகதில் அம்ம!”