பக்கம் எண் :

40கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

இயற்கைத் தாய்

அறுசீர்விருத்தம்

புனல்நிறைந்த தடமலர்கள், படர்கொடியிற்
        பூத்தமலர், கோட்டுப் பூக்கள்
இனையபல மலர்நாறும் மணமானாள்;
        இருநிலத்துப் பொருள்கள் தோறும்
மனங்கவர்ந்து நிறைந்திருக்கும் எழிலுருவம்
        அவளுருவாம், மலையில் வாழ்வாள்.
எனைமகனாப் பெற்றெடுத்தாள் முருகென்னும்
        எழிற்பேரும் உடையாள் வாழ்க!

அழுக்காறாம் எறும்பூரும், பொய்மைஎனும்
        அறுகால்சேர் ஈக்கள் மொய்க்கும்,
இழுக்கேறா நல்லறிவுப் பசிதோன்றும்
        இத்தனையும் தாங்க ஏலா
தழுதிடுவேன்; விரைந்தோடி என்பால்வந்
        தன்பென்னும் முலைசு ரந்த
பழுதில்லா முப்பாலை ஊட்டிடுவாள்;
        பார்புரக்கும் தாய்மை வாழ்க!

*தென்றலெனும் தொட்டிலிலே எனைக்கிடத்தித்
        தேன்நுகர மலர்கள் தோறும்
சென்றிருந்து தமிழ்பாடும் வண்டொலியால்
        செவிகுளிரத் தாலே தாலோ
என்றினிய தாலாட்டித் துயிற்றிடுவாள்;
        எழுந்தழுதால் ஆறு காட்டிக்
குன்றிருந்து வீழருவி, கடல்காட்டிக்
        கொஞ்சிடுவாள் மலர்கள் காட்டி.


* இப்பாடல், சாகித்திய அகாதமியால் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.