பக்கம் எண் :

50கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

பருவஎழில் மலர்ந்துள்ள பெண்ணொருத்தி
        பதியின்பால் புலந்து கண்ணீர்
பெருகஉதிர்த் தசையாமல் நிற்பதுபோல்
        பெருந்துணர்ப்பூஞ் செடிகள் எல்லாம்
மருமலர்கண் ணீர்சிந்தித் தலைசாய்த்து
        மணமின்றி நிற்கும், பின்னர்
அருகணையும் கணவன்வந் தவளிதழை
        அசைக்கின்ற போழ்து மங்கை,

*இதழ்விரித்து நகைகாட்டல் எனத்தென்றல்
        இனிதாகச் செடிகள் மீது
மெதுவாகத் தடவஇதழ் விரித்தரும்புப்
        பல்காட்டும்; மேலும் வண்டு
பதம்பாடச் செடிகொடிகள் நடமாடப்
        பரிந்தவற்றை மணக்கும் தென்றல்;
இதுபிறந்த மலைஎங்கள் தமிழகமே
        எனும்போது சிலிர்க்கும் உள்ளம்

ஐம்பூதத் தொன்றான காற்றிலையேல்
        அம்புவியில் இயக்கம் ஏது?
தெம்பேது மக்களுக்கு? துயில்பவனைத்
        தெருளில்லா இரவுப் போதில்
நம்பூறும் படிஅவனோர் பிணமல்லன்
        எனுந்திறத்தை நவில்வ தெல்லாம்
மென்பூவின் மூக்கில்வரும் காற்றன்றோ?
        மேதினியே காற்றால் வாழும்.

பணிவோர்க்குக் காப்பளித்துப் பணியாரை
        வேரறுப்பர் பண்டை எங்கள்
அணிசேர்க்கும் முடியரசர்; பெருவளியும்
        அடிக்குங்கால் ஆற்றின் நாணற்
பணிவேற்றுக் கொண்டங்குத் தலைநிமிர்ந்த
        பனைதென்னை மரங்கள் யாவும்
அணிவேரற் றடிவீழச் செய்திடுமால்;
        ஆருக்கும் பணிதல் நன்றாம்.


* இப்பாடல், சாகித்திய அகாடமியால் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.