பக்கம் எண் :

52கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

ஆறு52

எண்சீர் விருத்தம்

பகல்முழுதும் வெயில்காய்ந்து மேற்பால் சேரும்
        பகலவனை வழியனுப்பிக் கீழ்ப்பால் திங்கள்
முகமெழுப்பும் வேளைதனில் மகிழ்வு கூட்ட
        முரணில்லா யாழெடுத்தாள் காதல் நல்லாள்;
முகம்சுழித்தேன், `ஏனென்றாள்?’, `கவிதை யாக்க
        முயல்கின்றேன் நீபாட முனைதல் நன்றோ?
தகவிதுவோ?’ எனவுரைத்தேன்; யாழை வைத்தாள்;
        `தளிர்க்கரத்தாய்! என்னுடன்வா’ என்றழைத்தேன்.

அவளுடன்நான் கற்பனையில் மிதந்து சென்றேன்
        `அத்தான்! ஓர் ஐயமுண்டு, செய்யுள் யாக்கக்
கவலைதரும் இலக்கணமேன் வேண்டும்?’ என்றாள்;
        `காரிகையே! ஆற்றுக்குக் கரையேன் வேண்டும்?
சுவர்போலும் கரையிலையேல் ஆற்றின் தன்மை
        என்னாகும் சொல்லிடுக! ஊர்பாழ் அன்றோ?
அவமின்றி மொழிவிளங்கக் கவிதை என்னும்
        ஆற்றுக்கும் இலக்கணமோர் கரையே யாகும்;’

பாவலன்தன் கவிப்பொருளைப் பாடுங் காலை
        பாட்டகத்தே இலக்கணமும் அமைதல் வேண்டும்
ஆவலுடன் கவிபுனைவோர் இலக்க ணத்தை
        அருகில்வைத்துப் பெருங்கவிஎன் றெண்ணிக் கொண்டு
தாவுகின்றார் பாடுதற்குத் தவறி வீழ்ந்து,
        தகுபுலவோர் இலக்கணத்தைப் புதைத்து விட்டுக்
கூவுகின்றார் ஒப்பாரிக் குரலெ டுத்து;
        கொடுமையிது! கவிஞன்தன் மரபும் அன்று!’