பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்59

உன்னிடத்தே முத்துண்டு பவழமுடன்
        உணவாகும் மீனும் உண்டு;
பொன்கொழிக்கும் கப்பல்களைப் பாழாக்கும்
        பொல்லாத சுறவும் உண்டு;
மன்னிலத்தும் அப்படித்தான் மக்களுக்குள்
        வாழ்வழிக்கும் திமிங்கி லங்கள்,
கன்மனத்துச் சுறவினங்கள், நல்லொளியைக்
        காட்டுகிற முத்தும் உண்டு.

உலகுக்கோர் பொதுவுடைமை நீயென்ற
        உண்மையுணர்ந் திருந்தும் சில்லோர்
கலகத்தார் எனதுகடல் உனதுகடல்
        காணென்று பூசல் செய்வார்;
விலகத்தான் கோடுண்டா! குறியுண்டா?
        வீணாக மக்கள் யாரும்
உலகத்துப் பொருளெல்லாம் தமதென்றே
        ஒற்றுமையை மாய்க்கின் றாரே!

கற்றுணர்ந்த சான்றோரின் உள்ளம்போல்
        கடலேநீ ஆழம் கொண்ட
பெற்றியுணர்ந் தாழிஎன்றார்; யாதும்மூர்
        பிறரெல்லாம் கேளிர் என்ற
பற்றுடைய தமிழினத்தார் பரந்தமனப்
        பான்மையெனப் பரந்து நிற்கும்
ஒற்றுமையைக் கண்டன்றோ எம்முன்னோர்
        உனைப்பரவை என்று சொன்னார்

*விளங்காத மொழிபேசும் என்மகவு
        விளையாடும் பொழுது மண்ணில்
மழுங்காத சிறுவிரலால் கீறிவிடும்
        வளைவுகள்போல் கரையில் நண்டு
ஒழுங்காக அமையாமல் ஓடியோடிக்
        கோலமிடும்; ஆளைக் காணின்
இளங்காளை முன்வந்தால் நாணமுறும்
        இளையவள்போல் மறையும் ஓடி


* இப்பாடல், சாகித்திய அகாடமியால் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.