6 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
மதிப்பும், பரிசும், மட்டற்ற வரவேற்பும் பெற்ற பிறகே வெளிவரு கின்றன என்பதில் நமக்கு மகிழ்ச்சி பிறக்கிறது. வளர்ந்து வரும் வாழைத்தோட்டத்தில் ஒரு செவ்வாழையாக, வான்புகழ்சேர் தமிழ் இலக்கியப் பேரேட்டில் வரவுகலமாக, வையகமே எதிர்நோக்கும் தமிழ்த்தாயின் தண்ணளியில் முன்னணியில் இடம் பெற்று விட்டார். முடியரசன் என உணரும்போது நாம் பூரிப்படைகிறோம், வாழ்த்து கிறோம். நிமிர்ந்த தோற்றம், மலரும் முகம், கவர்ச்சி தரும் மீசை, துருவும் கண்கள், சுருண்ட முடி இவற்றுடன் திறந்த நெஞ்சம், சிந்திக்கும் பழக்கம், சிரிக்க வைக்கும் பேச்சு, பழகும் பண்பாடு - இவர்தான் முடியரசன். அவர் தோற்றத்தை அப்படியே அவர் கவிதைகளிலும் காணும்போது அன்று முடியரசர் நாட்டிலே தமிழ் வளர்ந்தது. இன்று முடியரசன் நாவிலே தமிழ் வளர்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. `இலக்கணம், சீர், தளைகட்குக் கட்டுப்படாதவனே கவிஞன்’ என வால்ட்விட்மன் கூறியதாக, தமிழ் இலக்கணத்தைத் தாறு மாறாக்கிக் கொண்டு வளர்ந்து வருகிறது ஒரு காக்கை பிடிக்கும் `கவிஞர்’ கூட்டம். செல்வாக்குள்ளவர்களின் சிறுமைக்குக் கட்டுப் படலாம். பத்திரிகை ஆசிரியர்களின் விளம்பரப் பாட்டுக்குக் கட்டுப்படலாம். இலக்கணத்திற்கு மட்டும் கட்டுப்படக் கூடாதாம். வால்ட்விட்மன் கூறியதிலே உள்ள உண்மையை இவர்கள் உணர வேண்டும். கவிஞன்தான் இலக்கணத்திற்குக் கட்டுப்படக் கூடாதே தவிர, கவிஞனுக்கு இலக்கணம் கட்டுப்படாமல் போய்விடக் கூடாது. இத்தகைய புதுமைக் `கவிஞர்’களைப் பார்த்து முடியரசன் பாடுகிறார். “இலக்கணத்தைப் புதைத்து விட்டுக் கூவுகின்றார் ஒப்பாரிக் குரலெடுத்து” என்று இலக்கணத்தைக் கொன்றதோடு விடவில்லையாம் இவர்கள். புதைத்துவிட்டுப் பக்கத்திலேயே உட்கார்ந்து ஒப்பாரியும் வைக்கிறார்களாம் “கவிதை” என்று. எவ்வளவு நயமான கண்டனம். முடியரசன் பாடல்களை `வெள்ளைக் கவிகளென’ நினைத்து, உள்ளத்தை மூடி வைத்து விட்டுப் புத்தகத்தைத் திறக்காதீர்கள், வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் நயம் உண்டு, கேலியும் கிண்டலும் உண்டு, உட்பொருளும் உண்டு. எனவே உணர்ந்து, நிறுத்தி, நின்று படிக்க வேண்டும். |