பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்7

முடியரசன் தாமே தம் பாடல்களைப் படித்துக் காட்டும் போது குரலிலும், கவிதையிலும், உச்சரிப்பிலும் கம்பீரம் தவழும். அவர் தம் பாடற் கருத்தை விளக்கும் போது நயங்கூறுவார். சுவை கொள்வார். கவிஞன் முதல் தரச் சுவையறிஞனாகவும் இருத்தல் வேண்டும். தம் பாடல்களைத் தாமே திரும்பிப் பார்க்கக் கூசுவோரும் உண்டு, `விசுவாமித்திரர் பரம்பரை’ போல,

துன்பத்திலும் சுவைகண்ட தென்றல் உள்ளம், தாய் நாட்டு நிலை நினைத்தால் புயலாகி விடுகிறது.

“ நல்லதமிழ் நாட்டெழுந்த இந்திப் போரில்
தேட்டாளர் முகங்களிலே அறுத்தெ றிந்த
திருத்தாலிக் கயிற்றில்நான் எழிலை கண்டேன்”

ஆம்; அது கணவனை இழந்த காரிகை கண்ணகிக்குச் சிலை எடுக்க நினைத்த சேரன் செங்குட்டுவனின் எழில்; அவன் புலியெனக் கிளம்பிப் போர் தொடங்கிப் புல்லர்களைப் புறங்காட்டவைத்த எழில், வீர எழில்.

வானத்து முழுமதியாள் வார்க்கின்ற நில வொளியை, வைய கத்துப் பொற் கொடியார் முக மலர்க்குப் பிறரெல்லாம் ஒப்பிட்டார். கவிஞர் முடியரசன் காண்பதோ,

        “ பொதுவுடைமை ஆட்சியினை இரவுப் போதில்
                      புரிகின்ற முழுமதியே...”

என்பது கவிஞருக்குப் பொதுவுடைமை ஆட்சியிலே உள்ள விருப்பத்தை அன்று நாம் சுட்டிக் காட்ட விரும்புவது, கருத்திலே உள்ள புதுமையை.

முடியரசனின் `ஆறு’ மிகச் சிறந்த இலக்கியப் படைப்பு, தனிக் கவிதைகளிலே இரண்டாயிரம் ஆண்டுகளாக உயிர் பெற்று வாழும் சங்க இலக்கியம் போல் அது திகழ்கிறது.

ஆறு ஓடுகிறது, வேகமாக ஓடுகிறது, சிலம்பு தந்த இளங்கோ வடிகள் காவிரியின் சிலம்பொலியைச் சித்தரித்துக் காட்டியுள்ளார். முடியரசனும் ஆற்றைப் பெண்ணாக்கி, அழகானதோர் கற்பனை செய்கிறார். அவளின் ஓட்டத்தைக் கண்டு கற்பனையாகச் சொல்கிறார் ஆசிரியர்.