பக்கம் எண் :

66கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

நிரல்பட அரிவையர் நின்று நடம்புரி
செயலெனப் பெரியவும் சிறியவும் ஆகி
ஆடி அசைதரும் அழகினை ஒருபால்
நாடி விழியால் நலம்நுகர்ந் திருந்தேன்;

அச்சமும் இன்பமும்

நலத்தகு நண்பர் உளத்தெழும் விழைவால்
அளப்பரும் ஆழமும் அகலமும் உற்ற
குளத்தினில் இயந்திரத் தோணிகள் ஏறி
விரைந்தோம், நானோ வியர்வியர்த் திருந்தேன்;
இருந்தஎன் நண்பர் ஏளனம் செய்தனர்,
வீரம் பழித்தனர், விடுத்தேன் அச்சம்;
நீரில்அத் தோணி நீந்துங் காலை
உலகை மறந்தேன் உயர்விற் பறந்தேன்
அடடா இன்பம்? அத்தனை இன்பம்!
அஞ்சுதல் ஒழிந்தார் நெஞ்சினில் இன்பம்
விஞ்சுதல் உறுதிஇவ் விளக்கமும் பெற்றேன்;

படைத்தவன் வாழ்க

மீண்டும் திரும்பி மேடையில் நின்று
காண்டகும் அந்தக் காட்சியை நோக்கி
உடைத்தோ இவ்வெழிற் குவமை? இதனைப்
படைத்தோன் வாழி! படைத்தோன் வாழி!
என்றேன்; நண்பன் “இறைவனோ” என்றனன்;
அன்றே என்றேன்; “அரசனோ” என்றான்;
அறியா துரைத்தனை ஆருயிர் நண்பா!
உறுதி குலையா உழைப்பினை நல்கிக்
குருதியை நீராக் கொட்டிய ஏழை
பாரில்இப் பூங்கா படைத்துத் தந்தனன்
ஆரிதை உணர்வார்? அவனை வாழ்த்தினேன்;
இதன்நலம் அறியான் பிறர்நலம் பேணுவான்
இதமுடன் உழைக்குமவ் வேழையை வாழ்த்தினேன்;
வாழிய அவன்குலம் வாழிய நன்றே! 81

(மைசூரிலுள்ள பிருந்தாவனத்தைக் கண்டு, மனங்குளிர்ந்து பாடியது.)