பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்69

அவள் :-

படுப்பேன், புரள்வேன், பின்
                பஞ்சணையில் கண்ணீர்
விடுப்பேன், எழுந்திருந்து
                வீழ்வேன்;- தொடுக்குமுயிர்
தாங்கவழி யானறியேன்;
                தையலெனைச் சார்துயரும்
ஓங்கிவளர் கின்ற
                துயர்ந்து.

அத்தான்! உமதுயிரை
                ஆட்கொண்ட நானினிமேற்
செத்தால் நலமென்று
                சிந்தித்தேன்;- பித்தாய்த்
திரிவீரே என்றெண்ணிப்
                பேசா திருந்தேன்;
அறியீரோ என்உண்மை
                அன்பு?

பெற்றார் தடையுண்டு;
                பின்பிறந்தார் நால்வருண்டு;
உற்றார் பலருண்டே
                உண்மையிது - முற்றாமல்
காதல் கருகிவிடும்
                காலந்தான் வந்திடுமோ
சாதல் உறுநிலையைத்
                தந்து!

இருவரும் :-

காணச் சகியாரோ
                காதலரை ஒன்றாக்கிப்
பேணத் தெரியாரோ
                பேருலகில் - கோணற்
சிறுமதிகள் தீயாவோ
                தீராத காதல்
நறவுண்டு நாம்மகிழ
                நன்கு. 7

(உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருப் பெற்றவை இப்பாடல்கள்.)