புதுமைப் பெண் கலிவெண்பா தோழி:- என்னடி உன்முகம் இப்படி வெண்மையதாய்ச் சின்னத் தனமும் சிறிதுநிலை மாறியதேன்? உண்ணா துறங்கா திருப்பதுமேன்? என்னுயிரே! கண்ணே! இதனுண்மைக் காரணத்தைச் செப்பாயோ? தலைவி:- நல்லபசி இல்லை நலமில்லை வேறொன்றும் இல்லையடி என் அன்பே! இப்படி ஏன் வாட்டுகிறாய்? தோழி:- ஆமாம் நீ ஏனுரைப்பாய் அன்பில்லை என்னிடத்தே ஏமாற்றுச் சொற்கள் இயம்புகிறாய் போய்வருவேன் தலைவி:- நில்லடி என்தோழி நேர்ந்ததையே சொல்லுகிறேன் பல்லை விரித்துப் பரிகாசம் பண்ணாதே நெஞ்சை ஒளித்ததொரு வஞ்சகம் இல்லைஎன்பார் நெஞ்சம் நீயன்றோ நேரிழையே! தாயறியாச் சூலுண்டோ? உண்மையைநான் சொல்லி விடுகின்றேன் மாலுண்டேன் காதல் மதுவால் மனந்தளர்ந்தேன் |