76 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
தோழி:- காதல் மதுவா? கட்டழகன் யாரோடி? ஈதென்ன விந்தை! எனக்குரைப்பாய் யாரென்று தலைவி:- தன்மானங் கொண்டோர், தமிழ்வீரர், நாட்டுமக்கள் நன்மானங் காக்க நயந்துதொண்டு செய்கின்றார், அண்ணா துரைபோல் அழகாகப் பேசுகின்றார், பெண்ணாப் பிறந்தார் பெறுமிழிவு நீக்குகின்றார் அன்னார்பால் என்னெஞ்சம் ஆழ்ந்ததடி; சேர்ந்துறையும் நன்னாள்தான் கூடுமட்டும் நல்லுறக்கம் வந்திடுமோ? தோழி:- போதுமடி உன்காதல்! பொல்லாப்பு வந்துவிடும்; தீதுபல நேருமடி; தேசத்தார் தூற்றிடுவார்; அன்பால் மணப்பதற் கம்மான் மகனிருக்க வன்பில் விரும்பேல் மறந்துவிடு மற்றவரை! தலைவி:- காய்ச்சும் இரும்பு கவர்ந்திட்ட நீர்போல ஆச்சுதடி என்மனம் அன்பர் அவரிடத்தே நாட்டார்கள் காதல் நலமறியார் புல்லுரைக்கும் வீட்டார்கள் சொல்கின்ற வெற்றுரைக்கும் நானஞ்சேன் உள்ளம் விழைந்த ஒருவரை விட்டுவிட்டு கள்ளச் செயல்புரியக் கற்பறியா நல்லகுலப் பெண்ணென்றா எண்ணினைநீ? பேதைமையால் கூறுகிறாய் கண்ணின் இமைபோலக் காப்பவனே? என்னுளத்தைத் தொட்டார்க் குரியளாய்த் தோள்தோய்ந்து வாழலன்றிக் கட்டாயக் கல்யாணங் கண்டிப்பாய் நான்வேண்டேன் அஞ்சி அஞ்சி வாழ்ந்த அரிவையர்கள் இந்நாளில் மிஞ்சிவிட்ட செய்கையினை மேல்நடத்திக் காட்டுகிறேன் என்றுரைத்துச் சின்னாளில் ஏறனைய காதலனை மன்றலன்று கொண்டாள் மகிழ்ந்து 40 |