பக்கம் எண் :

78கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

மற்றவர்கள் சொல்வதெலாம் கருதா தென்றன்
    மனம்விரும்பி மணமுடிக்கத் துணிந்து விட்டேன்
கற்றவரும் மற்றவரும் சினந்து நோக்கக்
    கைபிடித்தேன் பதிவுசெயும் தலைவர் முன்னே;
உற்றார்கள் ஊரார்கள் உறுமி னார்கள்
    “ஒவ்வாதே சமுதாயப் பண்புக்” கென்று
சொற்றார்கள் “சாதிகுலம் போச்சே! இந்தச்
    சொல்லரிய கொடுமையினை எங்குக் கண்டோம்!”

என்றார்கள் அவ்வளவில் விட்டா ரோ?இத்
    தெருவதனில் இருப்பதுவுங் கூடா தென்றார்;
கொன்றாற்போற் கொடுமைபல செய்தார்; மேலும்
    குடும்பத்தில் நிகழ்கின்ற நன்மை தீமைக்
கென்றாலும் அழைப்பதில்லை; வறுமை நோய்வந்
    திடர்படுத்தக் கடன்கேட்டேன் கொடுத்தா ரில்லை
“நன்றப்பா கலப்புமணம்” என்று சொல்லி
    நகைத்தார்கள் பகைத்தார்கள் உள்ளம் நொந்தேன்;

“காதல்மிகு வாழ்வினையே முன்னோர் கண்டார்.
    கண்டதிலை சாதிமுறை, உயர்வு தாழ்வு
ஓதவிலை, சங்கத்து நூல்கள் சான்றாம்
    உணர்ந்திடுவீர்” என்றுரைப்பர்; தலைய சைப்பர்;
காதல்மணம் கலப்புமணம் செயலிற் காட்டக்
    கருதிடினோ கரடிபுலி யாக மாறித்
தீதிழைப்பர் ஊரார்கள்; பேச்சில் மட்டும்
    தீரரவர் செயலென்றால் அஞ்சிச் சாவார்;

நாட்டுநிலை என்வருவாய் துணைவி மேனி
    நலமறிந்து நான்கைந்தாண் டான பின்னர்
வீட்டினிலே என்பிள்ளை தவழ்ந்து பேசி
    விளையாட நினைத்திருந்தேன்; சாதி மாறி,
நாட்டாரும் விரும்பாத, கடவுட் கொவ்வாச்
    செயல்புரிந்தான் நாத்திகத்தின் வழியிற் சென்றான்
கேட்டானா நம்முரையை? பிள்ளைப் பேறு
    கிடைத்ததுவா? கடவுள்செயல், என்றார் ஊரார்.