பக்கம் எண் :

80கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

மெல்லியலாள் தன்மனையாள் எனவும் எண்ணான்
    மேலுமொரு பதினாலாண் டவளும் கானில்
அல்லலடைந் தாளென்றும் கருதல் செய்யான்
    ஆரணங்கு கருவுற்றாள் எனவும் பாரான்
மல்குசின மேகொண்டான் ஊரார் சொன்ன
    மாற்றமொன்றே மதித்தானச் சனகன் பெண்ணைச்
சொல்லரிய துயரோடு கானம் ஏகச்
    சொன்னான்அக் குடும்பத்தில் பிரிவும் கண்டான்.

உரைத்திடுவர் ஊரார்கள் தங்க ருத்தை
    ஒன்றுக்கும் செவிசாய்த்தல் கூடா தன்னோர்
உரைப்பதனைச் செவிமடுத்தால் குடும்ப வாழ்வில்
    உலைவுவரும் உண்மையிது; புளியைப் பாலில்
கரைக்காதீர் பிறருரையைக் கேட்டு வாழ்வில்
    கலங்கிமிகத் துயருழந்து சாக வேண்டா
குரைக்கின்ற ஒலிகேட்டுக் கதிரோன் வானில்
    குறுகுவதற் கஞ்சுவனோ? அவன்போல் வாழ்வீர்

உரைத்தவெலாம் ஆண்பாலர் செயலே ஆகும்
    ஊராருள் பெண்ணினமோர் அங்கம் அன்றோ?
மறைப்பின்றி அவர்செயலும் சொல்லு கின்றேன்;
    மாமியிடம் சென்றோர்பெண் அவள்ம னத்தைக்
கரைத்திடுவாள், மருமகளைக் குறைகள் சொல்வாள்,
    `கண்டபடி உனைவைதாள், மதிக்கவில்லை,
விறைப்போடு திரிகின்றாள், அடக்கம் இல்லை,
    வீதியெலாம் கைகொட்டிச் சிரிக்கு’ தென்பாள்.

மற்றொருநாள் மருமகளைக் காண்பாள் `உன்றன்
    மாமியென்ன இப்படியா இருப்பாள்? உன்னைப்
பெற்றவள்போற் கருதாமல் தாழ்த்தித் தாழ்த்திப்
    பேசுகிறாள். உடையுடுத்த நகைகள் பூணச்
சற்றுமவள் பொறுக்கவிலை, கணவன் உன்கைச்
    சரடாக உள்ளானாம், குடும்பச் செய்தி
மற்றவர்பால் இவ்வண்ணம் பேசல் நன்றோ?
    மருமகள்தான் பணிப்பெண்ணோ?’ என்று சொல்வாள்.