பக்கம் எண் :

84கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

சிற்றூர்ச் செலவு

எண்சீர் விருத்தம்

பட்டணத்தில் என்மனைவி பிறந்து வாழ்ந்தாள்;
    பகலுணவு முடித்துப்பின் படுத்தி ருந்தேன்
தட்டெடுத்து வெற்றிலையை மடித்தெ டுத்துத்
    தந்தின்பம் சேர்த்திருந்தாள், பாளை நீக்கி
விட்டெழுந்த நகைஉதட்டைப் பற்றி “நாளை
    விடியலுக்குள் என்னூர்க்குச் செல்வோம்” என்றேன்;
“கட்டழகி எனச்சொல்லிக் கட்டி முத்தம்
    கணக்கின்றித் தந்தாலும் வாரேன்” என்றாள்

ஏன்’ என்றேன் `பட்டிக்கா’ டென்று ரைத்தாள்;
    `என்னைஉனக் களித்துள்ள அன்னை வாழும்
தேனெனவே இனிக்கின்ற என்றன் ஊரைத்
    தீதுரைத்தாய் அதனலத்தை உணரா திங்கே
கானுண்டோ? உணவுவிளை களந்தான் உண்டோ?
    காக்கின்ற தாயகத்தைக் காண எண்ணி
நானுன்னை அழைக்கின்றேன் வருக!’ என்றேன்
    `நடப்பதற்கு முடியாதே’ என்றாள்; பின்னர்

எப்படியோ ஒருப்பட்டாள் விரைந்து செல்லும்
    புகைவண்டி ஏறிப்போய் ஊரை நோக்கித்
தப்பெதுவும் நேராமல் நடந்து சென்றோம்;
    தழைத்துள்ள வயல்வரப்பில் நடக்குங் காலை
“அப்பப்பா நல்லவழி” என்று சொல்லி
    அகம்நொந்து முகஞ்சுழித்து நடந்து வந்தாள்;
`இப்படிவா’ என்றவள்கை பற்ற `ஐயோ!’
    என்றழுதாள் என்னென்று பதறிக் கேட்டேன்.