பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்85

மென்காலில் முள்தைத்த தென்ன, நெஞ்சில்
    வேல்குத்திக் கிழித்ததுவே றொன்றும் பேசா
தென்காதல் மிகுதியினால் குனிந்து முள்ளை
    எடுத்தவளை வருந்தாதே மன்னிப் பாய்நீ
என்மீது சினந்தனையோ? இனிமேல் இங்கே
    வருமெண்ணம் இல்லைஇல்லை என்றேன்; பாவை
“என்னென்ன சொல்லுகிறீர் அத்தான் நீங்கள்
    இருக்கின்ற இடமேதான் இன்பப் பூங்கா!”

என்றெழுந்து நின்றுகொண்டாள் ஒடிந்த உள்ளம்
    இனிதுமகிழ்ந் தெழுந்துவழி நடந்தேன் பின்னர்
குன்றனைய தோள்பற்றிக் கெந்திக் கெந்திக்
    குளிர்மொழியாள் நகையாடி நடந்தாள்; கண்ணே!
இன்றெனது மனம்நொந்து பதறி விட்டேன்
    என்றவுடன் “ஆடவரே அப்ப டித்தான்
ஒன்றுமிலா தஞ்சிடுவார்” என்று சொன்னாள்
    உள்ளங்கள் பரிமாறிச் சென்றோம் மேலும். 5