பக்கம் எண் :

86கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

எந்நாளோ?

எண்சீர் விருத்தம்

மனையாளை இல்லிருத்தி மாலை ஓர்நாள்
    மனஅமைதி பெறஎண்ணிச் சென்றேன்; நல்ல
`சினிமா’என் றுரைத்தார்கள்; அதனால் நானும்
    சிறிதெண்ணி உட்புகுந்தேன்; தொடங்கி னார்கள்
மனநிலையை முகக்குறிப்பால் உணர்த்தும் அந்த
    மங்கையைப்போல் நடிப்புலகில் கண்ட தில்லை!
அனநடையும் அவள்குரலும் படப்பி டிப்பும்
    அத்தனையும் புகழ்ந்தார்கள் ஆங்கி ருந்தோர்

கலையுண்டு நடிப்புண்டு நடன முண்டு
    கண்கவரும் அழகுண்டு; நெஞ்சை அள்ளும்
நிலையில்லை பேச்சொன்றும் புரிய வில்லை
    நினைப்பெல்லாம் எங்கெங்கோ சென்ற தங்குச்
சிலைஎன்ன இருந்தஎனை மணியின் ஓசை
    செவிபுகுந்து கிளப்பிற்று வீடு சென்றேன்;
`தலைவலி’என் றுரைத்தேன்நான்; `என்னை விட்டுத்
    தனியாகச் சென்றீரே வேண்டும்’ என்றாள்

“இல்லையடி! புரியாத மொழிப்ப டத்தை
    இனிதெனநான் பார்த்ததனால் வந்த நோவு!
நல்லஇயல் தமிழ்மொழியின் நிலையை எண்ணின்
    நைந்துருகிப் போகுதடி எனது நெஞ்சம்;
சொல்லரிய தாய்மொழியைப் பிழைகள் நீக்கிச்
    சொல்லறியா எழுதறியாத் தமிழர் நாட்டில்
புல்லறிவால் பிறமொழியர் படத்தை ஏனோ
    புகுத்துகிறார்? என்னென்பேன் அவர்தம் போக்கை