துடிதுடித் திருந்தேன்; துணைவரும் நானும் புண்ணியத் தலங்கள் புக்குநீர் மூழ்கியும் புண்ணியம் இல்லை; புதல்வற் பேறினி உண்டோ என்றோம் உள்ளூர்க் கணியர் ஏடுகள் புரட்டி இல்லை என்றார்; இடிந்ததென் உள்ளம் இருண்டதென் வாழ்வு மகப்பே றில்லா மலடோ அந்தோ! எனச்சின் னாள்கள் ஏங்கி யிருந்தேன். திரைகடல் கடந்து செல்வந் திரட்டப் பிரிந்தனர்; நானோ பெண்மையின் இயல்பால் வருந்தி மெலிந்தேன்; வந்தனர் ஒருநாள்; எழில்மணி மாட இருப்பில் இருந்தோம், குளிர்எனை அவர்பாற் கொண்டு சேர்த்தது, நடுங்கிய என்றன் நாணம் காத்திடக் கணியர் கூற்றைப் பொய்யெனக் காட்டிட உள்ளம் நைக்கும் உறுதுயர் தீர்ந்திட இன்பக் குளிர்நிலா இருள்முகில் நுழைந்த(து); என்முகம் அவர்தம் மார்பிற் புதைந்தது; மீண்டும் திங்கள் மேலெழுந் தொளிக்கதிர் வீசிச் சிரித்தது; விடியலைக் கண்டோம்; உணவு வெறுத்தேன் உமட்டலைக் கண்டேன் புளிப்பில் விருப்பம் பூத்தது, வாழ்வில் இனிப்பு மலர்ந்திட இன்பங் காய்த்தது காதற் கனியைக் கண்டேன் எண்ணம் பலித்த(து) இனியிலை துயரே. 46 |