94 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
எம்மவர் தந்தார் நிலைமண்டில ஆசிரியப்பா மாலைப் பொழுதில் மங்கிய ஒளியில் வேலை முடித்து விரிகதிர்ச் செல்வன் மறைந்தனன்; என்னை மணந்தவர் வந்தார் கரைந்திடு புள்ளினம் கண்ணயர்ந் திருந்தன; மேலுயர் மாடம் மீதினில் ஓரறை; பாலொளி சிந்தப் பார்த்தது நிலவு; பஞ்சணை அமர்ந்தேன் பக்கத் தமர்ந்தார் அஞ்சன விழியை அவர்பாற் செலுத்தினென்; பசியோ டிருந்தவர் பாய்ந்து வந்தெனை அசைய விடாமல் அள்ளி விழுங்கினார்; இன்பக் கடலுள் இருமீன் ஆயினம்! அன்பில் திளைக்கும் அந்நல் வேளை மின்விடு விளக்கொளி மெல்லென அசையச் சன்னல் வழியே சார்ந்தனை தென்றால்! உள்ளமும் உடலும் சிலிர்த்தன; காதற் கள்ளுண் டின்பக் கற்பனை உலகில் இருந்திடும் எம்மை மறந்திடச் செய்தனை! பறந்தனம் விண்ணிற் பறவைக ளாகி; இந்த விதம்பல இரவுகள் கழிந்தன; அந்தநன் னாளெலாம் இன்பமீந் தனையால் நல்லை நல்லைஎன நவின்றேன் பலகால்; இன்றோ துணைவர் ஈங்கிலர், அதனாற் கொன்றா லன்ன கொடுந்துயர் தந்தனை! நல்லை அல்லைஎன நன்குணர்ந் தேனே; கூர்ந்து நோக்கின் குற்றம்நீ புரிந்திலை; சேர்ந்தவர் பிரிந்தார் செய்தனர் துன்பம் அதற்கென் செய்குவை? ஆய்ந்து பார்க்கின் நல்லையும் அல்லை அல்லையும் அல்லை “தீதும் நன்றும் பிறர்தர வாரா” எனவாங்கு ஓதிய பொருண்மை உணர்ந்தேன் இன்றே இரண்டும் ஒருங்கே எம்மவர் தந்தார்; ஒருகுண மில்லாய் ஏகுதி நீயே! 32 |