இழந்த காதல் எண்சீர் விருத்தம் புகழணங்கு சிந்தனையாம் சோலைதனில் தனித்தி ருந்தேன் சிவந்தமுகப் பெண்ணொருத்தி அழுது நின்றாள்; நொந்திருப்ப தெதனாலோ? நின்பேர் யாதோ? நுவலுதியோ? எனப்பரிந்து வினவி னேன்யான்; “இந்தவுல கெனக்கிழைக்கும் தீங்கி னைத்தான் என்னென்பேன்! மெய்க்காதல் தீய்ப்ப தற்குப் புந்தியிலாச் செயல்செய்து மகிழ்ந்த தந்தோ! புழுங்குகிறேன் என்காதல் இழந்த தாலே என்பெயரைப் புகழென்று புவியோர் சொல்வர், எந்நாளும் பொதுத்தொண்டு புரிந்து வந்த அன்பனைநான் காதலித்தேன்! பழிஎன் பாளை அவனுக்கே உலகத்தார் மணமு டித்தார்; தன்னலமே விழையுமொரு செல்வன் என்னைத் தனக்குரிமைப் பொருளாக்கப் பணத்தை வீசி என்னலத்தை நுகர்வதற்கே சுற்று கின்றான் இவ்வுலகும் சரிஎன்றால் யாது செய்வேன்” கவிதைப்பெண் எண்சீர் விருத்தம் பார்செல்லும் நெறிநினைந்து செல்வேன் முன்னர்ப் பதறிவரும் மற்றொருத்தி நிலையைக் கண்டு யார்நங்காய் நீஎன்றேன்; “என்றன் வாழ்வை யாதென்பேன் ஐயாவோ! கவிதை என்று |