பக்கம் எண் :

106கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

73
என்ன செய்து விட்டாய்?

-
எடுப்பு

எதனைச் செய்தே உயர்ந்துவிட்டாய் - நீதான்
எதனால் உலகிற் சிறந்துவிட்டாய்?-எதனை

தொடுப்பு

இதயம் ஒன்றை மறந்துவிட்டாய் - கண்கள்
இருந்தும் ஒளியைத் துறந்துவிட்டாய்-எதனை

முடிப்பு

சிரிக்கத் தெரிந்தும் மறைத்துவைத்தாய் - நீயே
சிந்தையில் அன்பைக் குறைத்துவைத்தாய்
திறக்குங் கதவை அடைத்துவைத்தாய் - நெஞ்சில்
தீமைகள் யாவும் படைத்து வைத்தாய்-எதனை

எதனால் நீதான் செருக்கடைந்தாய்? - உள்ளம்
இல்லை அதனால் உருக்குலைந்தாய்
உதவும் நினைவை இழந்துவிட்டாய் - வீணில்
உடலால் சுமைபோல் வளர்ந்துவிட்டாய்-எதனை

பள்ளியில் எல்லாம் படித்துவிட்டாய் - ஆனால்
படித்ததை அங்கே முடித்துவிட்டாய்
தெள்ளிய அறிவைக் கெடுத்துவிட்டாய் - அதனைத்
தீமைக் கெனவே கொடுத்துவிட்டாய்-எதனை