பேச்சில் முழுதுஞ் சொல்லிவிட்டாய் - வீணில் பெருமைகள் யாவும் அள்ளிவிட்டாய் பூச்சும் வேடமும் போட்டுநின்றாய் - செயலில் புன்மைகள் மட்டுமே காட்டுகின்றாய் - எதனை வானில் நடந்தே முடித்து விட்டாய் - அங்கே வண்ண நிலாவைப் பிடித்துவிட்டாய் ஏனை வியப்பும் நடத்திவிட்டாய் - ஆனால் ஏனோ குணத்தைக் கெடுத்துவிட்டாய்- எதனை அறிவின் எல்லை அறிந்துகொண்டாய் - இயற்கை ஆற்றலை எல்லாந் தெரிந்துகொண்டாய் உரிமை வாழ்வும் விரும்புகின்றாய் - மற்றோர் உரிமையை மட்டுஞ் சுரண்டுகின்றாய்-எதனை ஓரா யிரமுறை ஆடுகின்றாய் - கடவுள் ஒவ்வொன் றின்முனும் பாடுகின்றாய் மாறா இன்பந் தேடுகின்றாய் - ஆனால் மனிதனை மட்டும் சாடுகின்றாய்-எதனை மனிதனை மனிதன் விரும்பிவிட்டால் - நெஞ்சில் மானிட அன்பே அரும்பிவிட்டால் தனிமனி தன்மனந் திருந்திவிட்டால் - உலகம் சரிநிகர் சமமாய் உயருமடா-எதனை |