பக்கம் எண் :

காவியப் பாவை107

பேச்சில் முழுதுஞ் சொல்லிவிட்டாய் - வீணில்
பெருமைகள் யாவும் அள்ளிவிட்டாய்
பூச்சும் வேடமும் போட்டுநின்றாய் - செயலில்
புன்மைகள் மட்டுமே காட்டுகின்றாய் - எதனை

வானில் நடந்தே முடித்து விட்டாய் - அங்கே
வண்ண நிலாவைப் பிடித்துவிட்டாய்
ஏனை வியப்பும் நடத்திவிட்டாய் - ஆனால்
ஏனோ குணத்தைக் கெடுத்துவிட்டாய்- எதனை

அறிவின் எல்லை அறிந்துகொண்டாய் - இயற்கை
ஆற்றலை எல்லாந் தெரிந்துகொண்டாய்
உரிமை வாழ்வும் விரும்புகின்றாய் - மற்றோர்
உரிமையை மட்டுஞ் சுரண்டுகின்றாய்-எதனை

ஓரா யிரமுறை ஆடுகின்றாய் - கடவுள்
ஒவ்வொன் றின்முனும் பாடுகின்றாய்
மாறா இன்பந் தேடுகின்றாய் - ஆனால்
மனிதனை மட்டும் சாடுகின்றாய்-எதனை

மனிதனை மனிதன் விரும்பிவிட்டால் - நெஞ்சில்
மானிட அன்பே அரும்பிவிட்டால்
தனிமனி தன்மனந் திருந்திவிட்டால் - உலகம்
சரிநிகர் சமமாய் உயருமடா-எதனை