பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)119

2
குயிலெனக் கூவுவோம்

மலர்விழி சோலையை நாடிடுவோம்
    மயிலென மகிழ்வுடன் ஆடிடுவோம்
மலர்தொறும் வண்டெனப் பாடிடுவோம்
    மனங்கவர் குயிலெனக் கூவிடுவோம்

கூவிடுங் குரல்தனைத் தடுத்திடவே
    கொடுமைகள் வருமெனில் துடித்தெழுவோம்
ஏவிடும் வேலுரு வெடுத்திடுவோம்
    எதிர்த்திடும் பகைதனை அடக்கிடுவோம்

கனிநிகர் கவிதைகள் படைத்திடுவோம்
    காவியம் பற்பல தொடுத்திடுவோம்
இனிமைகள் யாவையும் படைத்திடுவோம்
    இடர்தருஞ் செயல்களைத் தடுத்திடுவோம்

வறுமையின் கொடுமையைப் போக்கிடுவோம்
    வளமைகள் யாவுமே ஆக்கிடுவோம்
சிறுமைகள் நம்மிடம் நீக்கிடுவோம்
    சிந்தனை நெஞ்சினில் தேக்கிடுவோம்

உழைப்பினை நலமுறக் காட்டிடுவோம்
    உரிமையை உலகினில் நாட்டிடுவோம்
பிழைப்பினைப் பறித்திடும் கூட்டமதைப்
    பெரும்புலி போலெழுந் தோட்டிடுவோம்

உறிஞ்சிடும் அட்டைகள் உலவிடுமேல்
    உலகமும் அறநெறி விலகிடுமே
அறிந்திடின் அனைவரும் நலமுறலாம்
    அமைதியும் நிலமிசை நடமிடலாம்