பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)125

5
மூடம் என்று மாறுமோ!

கடவுள் கடவுள் என்கிறாய் - நாளுங்
    கயமை யாவுஞ் செய்கிறாய்
மடமை நோக்கிச் செல்கிறாய் - நல்ல
    மதியை அந்தோ கொல்கிறாய்

கல்வி தெய்வம் என்கிறாய் - நாளுங்
    கற்க என்ன செய்கிறாய்?
செல்வந் தெய்வம் என்கிறாய் - அதனைத்
    தேடத் தீமை செய்கிறாய்

சின்னம் உன்றன் மெய்யிலே - செய்யுஞ்
    செயல்கள் எல்லாம் பொய்யிலே
சொன்ன வேதங் கையிலே - வஞ்சம்
    சூது நெஞ்சப் பையிலே

எத்தி வாழப் பார்க்கிறாய் - அதனுள்
    இறைவன் பேரைச் சேர்க்கிறாய்
கொத்துங் கழுகுப் போக்கினால் - உன்றன்
    கொள்கை நன்மை யாக்குமோ?

செய்யுந் தீமை யாவுமே - அந்தத்
    தேவன் என்றால் தீருமோ?
பொய்யும் மெய்ம்மை யாகுமோ? -காட்டுப்
    பூனை புலியென் றாகுமோ?